நட்சத்திர விடுதியில் சுதந்திரமாக உள்ளோம்: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேட்டி

கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம்
நட்சத்திர விடுதியில் சுதந்திரமாக உள்ளோம்: அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் பேட்டி

சென்னை: கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது என குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (பிப்.13) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இன்று காலை முதல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாச்சியர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்டு ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசம், தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கூவத்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் எம்எல்ஏக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக கூறியுள்ளார். இது போன்ற தவறான செய்தியை எதிர் அணியினர் தான் பரப்பிக்கொண்டிருக்கின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும், செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அதற்கு சசிகலா தரப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எங்களால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. இதுபோன்ற செயலை தூண்டிவிட்டு மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் பன்னீர்செல்வம் தரப்பினர் தான் செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் ஆய்வு குறித்து கேட்டதற்கு, அப்படி யாரும் இங்கு வந்துள்ளதாக தெரியவில்லை, அப்படி யாராவது வந்து எங்களிடம் கேட்டால், இங்குள்ள 128 எம்எல்ஏக்களும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் என்று தெரிவிப்போம். அதனை யார் வேண்டுமானாலும் எங்களுடைய செல்லிடை பேசியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என கூறினார்.

ஆளுநர் இன்றோ அல்லது நாளையோ எப்போது அழைத்தாலும் உடனடியாக சசிகலாவுக்கு ஆதரவாக எங்களின் பலத்தை நிரூபிப்போம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com