மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம் திமுக என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரியலூரில் சிறுமி நந்தினி பாலியல் கொடுமைக்குள்ளாகி கொல்லப்பட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சென்னை அருகே சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கும், பெண்களுக்கான பாதுகாப்பும் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. காட்டுமிராண்டித்தனமான குற்றத்தில் ஈடுபட்டு சிறுமி ஹாசினியை எரித்துக் கொன்ற குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மேலும், இனி இத்தகைய குற்றங்கள் நடைபெறாதபடி தடுக்க முடியும்.
ஆனால், இதையெல்லாம் கவனிக்க தமிழகத்தில் அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் அதிகாரப் போட்டிகளின் காரணமாக, ஹாசினிக்கு நேர்ந்த கொடூரம் வெளியே தெரியாமலேயே போய்விட்டது.
தமிழக அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஹாசினி குடும்பத்துக்கு நீதியையும், இழப்பீட்டையும் வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பில், குறிப்பாக சிறுமிகள் பாதுகாப்பில் காவல் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம்தான் திமுக. நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.