தமிழக அரசியல் குழப்பத்தில் மத்திய அரசின் தலையீடு சிறிதளவும் கிடையாது என்று பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
சென்னையில் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
""அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து செயல்படுவது அவர்களது கட்சி சார்ந்த நடவடிக்கை. ஆனால் முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்ததாக ஓ.பன்னீர் செல்வம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காலூன்ற பாஜக முயற்சி செய்யவில்லை: இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மத்திய அரசு பின்பலமாக உள்ளது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழகத்தில் தற்போது நிலவும் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி, பாஜக தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல். சட்டப் பேரவை அதிமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுக்காததற்கு மத்திய அரசுதான் காரணம் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
ஆளுநர் தமது அதிகாரத்துக்குள்பட்டே அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுகிறார். இதில் எப்படி மத்திய அரசு தலையிட முடியும்?
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்? முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் சசிகலாவின் அவசரப் போக்கு காரணமாகவே தமிழகத்தில் இத்தகைய சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் யாருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை சட்டப் பேரவையில் நீருபிக்க, ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்து என்றார்.