தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற விஷயத்தில் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். அப்படி அவர் முடிவெடுக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாதவது:
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற விஷயத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திங்கள்கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லா விட்டால், அவர் குதிரை பேரத்துக்கு உடந்தையாக இருப்பதாகக் கூறி, அரசியல் சாசனத்தின் 32-ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்ய முடியும்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் நீண்ட நாட்களுக்கு தாமதம் செய்ய முடியாது என்ற எனது கருத்தையே மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொராப்ஜி கருத்து கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகப்பெரிய சட்ட நிபுணர்கள் அனைவரும் எனது கருத்தையே கொண்டுள்ளனர் என்று சுவாமி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே, செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "நான் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இது மிகவும் அபத்தமானது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சசிகலா மீது வழக்குத் தொடுத்தவர்களின் நானும் ஒருவன். அதே நேரத்தில் அரசமைப்புச் சட்டமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கூறுகிறேன். தமிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க, எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்திக்க வேண்டும்' என்று சுவாமி தெரிவித்துள்ளார்.