புதுதில்லி: தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். எல்.ஷர்மா. இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. ஆளும்கட்சியான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி தங்கள் சட்டமன்ற கட்சித்தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவைத் தேர்வு செய்துள்ளனர்.
இது தொடர்பான கடிதமும் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை இன்னும் ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். இதன் மூலம் தமிழகத்தில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது.
எனவே சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.