அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஆட்சி அமைக்கும் விஷயத்தில் தமிழக ஆளுநர் அவசரப்படக் கூடாது என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக விவகாரத்தைப் பொருத்தவரையில் ஆளுநரின் நடவடிக்கைகள் சரியான பாதையிலேயே செல்கின்றன. அவருக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகச் சொல்வது சரியல்ல. எனவே, ஆளுநர் அவசரப்படாமல் காத்திருந்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரையிலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஒப்புதல் வழங்கும் விஷயத்தில் ஆளுநர் பொறுமை காக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீர்செல்வத்துக்கு முதலாவதாக ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும்.
அதன் பிறகே சசிகலாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பன்னீர்செல்வம் மிரட்டி பணிய வைக்கப்பட்டார் என்பதைக் கருத்தில் கொண்டு அவரது பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தரப்பட வேண்டும்.
சசிகலா மீதான வெறுப்பின் காரணமாகவே பல அதிமுக நிர்வாகிகள் தீபாவுக்கு ஆதரவளித்தனர். தற்போது பன்னீர்செல்வத்தை ஆதரிக்கின்றனர். இந்த பிரச்னையில் ஸ்டாலினையோ, திமுகவையோ விமர்சிப்பது தேவையற்றது.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.