சென்னை: சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது என்று வி.கே. சசிகலா தொண்டர்களிடையே நகைச்சுவையாக பேசினார்.
போயஸ் தோட்டத்துக்கு வெளியே தொண்டர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக ஆட்சித் தொடர என் உயிரையும் கொடுக்கத் தயார். சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது. நான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, என்னுடன் அதிமுக எம்எல்ஏக்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு சட்டப்பேரவைக்குச் சென்று மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் புகைப்படத்தை திறக்கும் வரை ஓய மாட்டோம்.
பதவி மீது எனக்கு ஆசையில்லை. முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
பல சோதனைகளை வென்று அதிமுக பயணித்து வருகிறது. சோதனைகள் அதிமுகவுக்கும் எனக்கும் புதிதல்ல. எத்தனை எதிரிகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. 33 ஆண்டுகளாக சலசலப்பை பார்த்து வருகிறேன்.
காவல்துறைக்கு சங்கடம் ஏற்படாமல் அமைதிப் போராட்டம் தொடரும். எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தோம்.
நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதல்வராகியிருக்க முடியும். ஜெயலலிதா மறைந்த போது எனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால், பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் முதல்வராக பதவியேற்க முடிவு செய்தேன்.
சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடாது. நிச்சயம் தர்மம் வெல்லும். போராட்டம் என்பது என் கையில் ஒட்டுகிற தூசு மாதிரி. அதிமுகவை எக்காலத்திலும் பிரிக்க முடியாது.
பன்னீர்செல்வத்தால் ஒன்றரை கோடி தொண்டர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசினார்.