தமிழகத்தின் நலன்கருதி நல்ல முடிவை ஆளுநர் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 50-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் அ.தாமஸ் செல்வம் தலைமை வகித்தார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
தற்போது தென்மாநிலங்கள் கல்வியில் முன்னேறியுள்ளன. இதற்கு அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல. தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளும் தான் காரணம். இளம் தலைமுறையினரிடம் கல்வியிருந்தால் போதும். அதன் மூலம் சாதிக்கலாம் என்றார்.
முன்னதாக நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களும், திறமையான ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வழங்கி கெüரவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது காபந்து முதல்வராக அவர் செயல்பட்டு வருகிறார். தமிழக எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தேர்வு செய்து ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசியல் நிலையினையும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழகத்தின் நலன்கருதி விரைவில் நல்ல முடிவினை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.