புதுச்சேரி: அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரிய திருப்பம் உண்டாகி உள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது கூறியதாவது:
தமிழக அரசியல் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
உச்சநீதிமன்றம் சசிகலா வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்துள்ளது. அதனடிப்படையில் சிறைக்கு செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பை முழுமையாக படிக்கவில்லை.
இந்த தீர்ப்பை பொறுத்தவரை மறு ஆய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே சசிகலா அம்மையார் முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறையின்படியும், சட்ட விதிகளின் காரணமாகவும் தண்டனை பெற்றவர் அமைச்சராகவும், முதல்வராகவும் வாய்ப்பு குறைவு. இதுபற்றி சட்ட நிபுணர்கள்தான் கருத்து கூற வேண்டும்.
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.