சென்னை: சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பார்ப்பதற்காக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு அணியினர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் காரணமாக சசிகலா முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் பன்னீசெல்வம் அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர கசப்புகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் கூவத்தூர் விடுதியில் வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க செல்ல உள்ளதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.