‘தமிழகத்தில் தற்போது ஆட்சி அமைக்க திமுகவுக்கு எண்ணம் இல்லை. ஆட்சியமைக்கும் யாருக்கும் பெரும்பான்மை பலம் அளித்து ஆதரவளிக்கும் எண்ணமும் திமுகவுக்கு இல்லை’ என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டசபையில் பிரதான எதிர்கட்சியான திமுகவின் நிலைப்பாடு என்னவென்பதை அக்கட்சியின் பொதுச் செயலளாளரும் , மூத்த நிர்வாகியுமான அன்பழகன் இவ்விதம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் தமது பதவியை ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாட்களில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டசபையில் ஓ.பி. எஸ்ஸைப் பார்த்து நீங்களே முதல்வராக தொடர வேண்டும் அதற்கு எங்களுடைய ஆதரவு உண்டு என்று தெரிவித்திருந்தார். துரைமுருகன் மட்டுமல்ல, முதல்வர் பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் சில நாட்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார். அப்போது அவரது கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லை என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து தற்போது சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள அசாதாரண சூழலில் பேராசிரியர் அன்பழகன் திமுக சார்பில் ஆட்சி அமைப்பவர்களுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.