சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார். மேலும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது எம்.ஜி.ஆர்’ இதழில், சசிகலாவின் உறவினர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் சசிகலாவின் சகோதரி மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிருந்தது. அதனைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தனது அறிக்கையின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டதால் டி.டி.வி. தினகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.