மதுராந்தகத்தை அடுத்த கடப்பாக்கம் அருகேயுள்ள ஆலம்பரை கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை கடல் தீவைக் கடக்க முயன்ற புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயமாயினர். அவர்களை சூனாம்பேடு போலீஸார் தேடி வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க ஆலம்பரைக் கோட்டையானது, இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அதனைப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதிக்கு, புதுச்சேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் படித்து வரும் புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (21), ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த கௌதம்பிள்ளை (21), விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டைச் சேர்ந்த அஜய் (21) ஆகியோர் ஆலம்பரை கோட்டையைச் சுற்றிப்பார்க்க செவ்வாய்க்கிழமை வந்தனர். அவர்கள் அனைவரும் கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கோட்டையின் மதிலோரம் உள்ள கரைப் பகுதியில் இருந்து முகத்துவாரம் வழியாக சிறிய தீவுக்குச் செல்ல சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பவில்லை எனத் தெரிகிறது.
இதையறிந்த மாணவர்களுடன் வந்த நண்பர்கள், சூனாம்பேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சூனாம்பேடு உதவி ஆய்வாளர் காசி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கடல் அலைகளால் மாணவர்கள் மூவரும் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது குறித்து சூனாம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.