கடலூர் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் அருகே உள்ள ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர் ர.மாறன் (40). மீனவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் (41), ரஞ்சித்குமார் (30), பிரபு (33), அருண் (24) ஆகியோருடன் மீன்பிடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை விசைப் படகில் ராசாப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து கடலுக்குள் சென்றார்.
இவர்கள் நடுக் கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. படகிலிருந்த 5 பேரும் கடலுக்குள் விழுந்தனர். பின்னர், அவர்கள் கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். மாறன் கரைக்கு அருகே வந்த போது முச்சுத் திணறலுக்கு உள்ளானார். அவரை மற்ற 4 பேரும் மீட்டு, கரைக்கு கொண்டுவந்து முதலுதவி அளித்தனர்.
பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு மாறன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.