புது தில்லி: சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அது 99 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதற்கே வாய்ப்பு இருப்பதாக என்று மூத்த வழக்குறைஞர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
இதுகுறித்து மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத் மலானி கூறியதாவது:
சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அதிமுவைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு சசிகலா வழக்கில் மேல் முறையீடு செய்ய உச்சநீதிமன்றத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. சட்டத்தை தம்பிதுரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
சட்டப்படி யார் வேண்டுமானாலும் சசிகலா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், அது 99 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதற்கே வாய்ப்பு இருக்கிறது. இதனால் எந்த பலனும் இல்லை என்று கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில் இப்படியொரு சூழ்நிலை உருவாகும் என்று சசிகலாவுக்கு முன்பே தெரிந்திருக்கும். அவர் முதல்வர் பதவியேற்க முயற்சி செய்ததால் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையை தவிர்த்திருக்கலாம்.
மேலும், கட்சியில் பிளவு ஏற்பட்டு இருக்காது. எம்எல்ஏக்களை பிடித்து வைத்துக் கொண்டு ஒருவர் முதல்வராக பொறுப்பேற்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள். இந்த தீர்ப்பு அதிமுகவின் எதிர்காலத்தை சந்தேகத்துக்கு உரியதாக்கி விட்டது என்றார்.
அதிமுகவில் வேறு யாராவது ஒரு நல்ல தலைவர் முன்னிறுத்தப்பட்டால் கட்சி நிலைபெறும். கட்சியில் நேர்மையான தலைவரை முதல்வர் ஆக்க வேண்டும். இது அதிமுகவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.
ஆளுநர் இனி வழக்கமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். பின்பு அவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.