சூலூர்: விரைவில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவே வாய்ப்புகள் உள்ளது என்று திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக செயல் தலைவரான ஸ்டாலின் கோவை மாவட்டம் சூலூரில் இன்று நடைபெற்ற திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்பங்கேற்றார். அங்கே அவர் பேசியதாவது:
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தைப் பொறுத்த வரை இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது.
அதிமுகவினருக்கு மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ இப்போது சிந்தனை இல்லை. அதிமுகவில் தற்போது போட்டியில் இருக்கும் இரண்டு அணிகளில் எந்த அணி ஆட்சி அமைத்தாலும் அது அற்ப ஆயுள் கொண்ட அரசாகவே இருக்கும்.
நமக்கு தற்போது 89 எம்எல்ஏக்கள் தற்போது உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம். அதனால்தான் நமக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.
உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபை தேர்தலே கூட நடக்க வாய்ப்பு உள்ளது. கடுமையாக உழைத்தால் நமக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது.
திமுகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதனால் கட்சியினர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இளைஞரணி உறுப்பினர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.