சென்னை: சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை மீட்டு நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று கோரி குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்காக மனைவி ப்ரீத்தாவும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏவுக்காக அத்தொகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவர்களின் மனு மீது விசாரனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் காவல்துறையினர் கூவத்தூர் தனியார் விடுதிக்கு சென்று விசாரனை நடத்தினர். அதன் முடிவை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் அழைத்தனர்.
அதில் எம்.எல்.ஏக்கள் இருவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்திருந்தனர்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.