புதுதில்லி: அதிமுக விதிகளை மீறி சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மைத்ரேயன் தலைமையில் அதிருப்தி எம்.பிக்கள் தேர்தல் ஆணையர் நசீம் சைதியிடம் புகார் அளித்தனர்.
தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதிக்கத்தை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பிய முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்ட 10 எம்.பிக்கள் இன்று தில்லி புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் மைத்ரேயன் தலைமையில் இன்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளர் என்ற விதியே அதிமுகவில் இல்லை. எனவே தற்போது பொதுச் செயலாளராக உள்ள சசிகலா செய்த நியமனங்கள் மற்றும் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் செல்லாது என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.