தனது இல்லத்துக்கு வரும் அதிமுக தொண்டர்களிடம் அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்துகளை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டு வருகிறார்.
இதற்காக கருத்துக்களைப் பதிவு செய்யும் வகையில் பெட்டியை அவர் வைத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வர தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தும் வந்தனர்.
இதைத் தொடர்ந்து தொண்டர்களின் கோரிக்கையை ஏற்ற பின் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக பொதுமக்களிடமும், தொண்டர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே முடிவு செய்வதாகவும் ஏற்கெனவே கூறியிருந்தார்.
விவரங்கள் சேகரிப்பு: இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவின் இல்லத்துக்கு வரும் தொண்டர்களின் முழு விவரங்களும் நிர்வாகிகள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தொண்டர்கள், பொதுமக்களின் மன நிலை குறித்த கருத்துகளைப் பதிவு செய்த மனுக்களை அளிப்பதற்காக இல்லத்தின் முன்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டியில் ஒவ்வொரு நாளும் மனுக்களை தொண்டர்கள் அளித்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.