சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து டிடிவி தினகரன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து வருகிறார்.
நேற்று மாலை, ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய நிலையில், இன்று ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமியை, தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி இன்று முதல்வராக பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.