திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டதாக பரவிய தகவலை, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்தார்.
சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 89 -ஆக உள்ளது. தற்போது, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தெளிவுபட கூறி வருகின்றனர். அதேசமயம், சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பலப்பரீட்சை நடைபெறும்போது, திமுக நல்ல முடிவை எடுக்கும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் இருக்குமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டதாக புதன்கிழமை காலை தகவல் பரவியது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின், அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று மறுத்தார். தனக்குத் தெரியாமல் எப்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனவும் செய்தியாளர்களிடமே அவர் கேள்வி எழுப்பினார்.
திமுகவைப் பொருத்தவரை, தற்போதைய நிலையில் அதிமுகவில் மோதல் ஏற்பட்டு, அதன் மூலம் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருந்து வருகிறது.