புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பன்றி காய்ச்சல் கடந்த ஜனவரி மாதம் முதலே வேகமாக பரவி வருகிறது. இதில் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த தயாளன், பனித்திட்டு பகுதியைச் சேர்ந்த பானுமதி , பெரிய காலாப்பட்டு முருகன் மற்றும் அரியாங்குப்பத்தை சார்ந்த சத்யராயணன்,முருங்கம்பாக்கத்தை சார்ந்த மதியழகன் ஆகியோர் பன்றி காய்ச்சலால் ஏற்கெனவே இறந்துள்ளனர்.
மேலும் காட்டேரிக்குப்பம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு பன்றி காய்ச்சல் தொற்று இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த குழந்தை ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முருகம்பாக்கம் சுதானா நகரில் கார்த்திக் என்பவர் பன்றி காய்ச்சலால் உயிர் இழந்துள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. மேலும் முருகம்பாக்கத்தில் மட்டுமே இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிட்டதக்கது.
இதுவரை 6 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி ராஜிவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் இரு குழந்தைகளும், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.