தமிழகத்தில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது நல்லது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் அவர், செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் சுற்றுப்பயணத்தைத் தொடக்கியுள்ளேன். தமிழகத்தை மீட்க மாற்று அரசியலை நடத்துவது என்ற நோக்கத்துடன் தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அக்கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஜெயலலிதா இறந்த பின்னரும், அவர் மீது ஊழல் கறை படியும் வகையில் அவப்பெயரை உருவாக்கித் தந்தவர் சசிகலா.
எனவே, தமிழகம் ஊழலில் இருந்து விடுபட வேண்டும் என்றால் அதிமுகவை வெளியேற்ற வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க பாஜகவால்தான் முடியும். தற்போது அதிமுக துணைப் பொதுச் செயலராக சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே நியமனம் செய்திருப்பது, மீண்டும் பினாமிகள் மூலமாக தமிழகத்தை ஆட்சி செய்வதற்கே எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவை பொருத்தவரை, தமிழகத்தில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலும், அதன் தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறுவதே நல்லது என்றே கருதுகிறது. கூவத்தூரில் தங்கியுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்ற, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் ஆளுநர் அவசரப்படத் தேவையில்லை என்றார். இந்தப் பேட்டியின்போது, பாஜக மூத்த நிர்வாகிகள் ஆ.சரவணன், என்.பி.பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.