எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அதிமுக தனது அழிவுப் பாதையை தேர்வு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்க பதிவில் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கட்ஜூ தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறிருப்பதாவது:
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று வியாழக்கிழமை மாலை பதவியேற்றார். இதுகுறித்து மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்க பதிவில், தமிழர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர், சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருந்து இயக்கப்படுகின்ற ஒரு அரசாங்கத்தை தமிழக மக்கள் இனி 4 ஆண்டுகளுக்கு பார்க்கப்போகிறார்கள். முதல்வர் பழனிச்சாமி சிறையில் இருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றுவார் என கூறியுள்ளார்.
நேற்று தனது டுவிட்டர் பக்க பதிவில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் பேரவைத் தேர்தல் நடைபெற்றால், திமுக மகத்தான வெற்றியைப் பெறும். அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அதிமுக பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் ஆதரவாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வமும், கடந்த காலங்களில் சசிகலாவின் ஆதரவாளராகவே இருந்து வந்ததையும் கட்ஜூ நினைவுபடுத்தியுள்ளார். இவர்கள் இருவர் மீது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளதால், ஊழல் கறைபடியாத எம்.எல்.ஏ. நட்ராஜை முதல்வராக பதவியேற்கச் செய்ய வேண்டும் என கட்ஜூ விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், பழனிசாமி முதல்வரானால், சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருந்து இயக்கப்படுகின்ற ஒரு அரசாங்கத்தை தமிழக மக்கள் இனி பார்க்கப்போகிறார்கள் என கட்ஜூ விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.