மதுராந்தகத்தை அடுத்த கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை வெளி மாநிலப் பாதுகாவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எம்எல்ஏ-க்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்னைக்கு சென்றனர். மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், இரவு 7 மணிக்கு மீண்டும் விடுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், வடக்கு மண்டல ஐ.ஜி. செந்தாமரை கண்ணன், எஸ்.பி. முத்தரசி, மாமல்லபுரம் டிஎஸ்பி டேவிட் ஆகியோர் தலைமையில் போலீஸார், கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.