புதுதில்லி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தாற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தோட்டம் ஒன்றில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் பொழுது பண்டைய நகரம் ஒன்று புதையுண்டிருப்பதற்கான சான்றுகள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மத்திய தொல்லியல் துறையினரால் அங்கே அகழ்வுகள் நடத்தப்பட்டன. சில முக்கியமான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் திடீரென்று அங்கு நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேவி எழுப்பினார்.அவருக்கு பதிலளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தாற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது அங்கே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் தனிக்கண்காட்சியில் வைக்கப்படும். அத்துடன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள விஷயங்களை வைத்து அறிக்கையொன்றுவெளியிடப்படும்.
இவ்வாறு அமைச்சரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.