மதுரை, அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தைச் சுற்றியுள்ள 14 கடைகளுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
மதுரை, அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பம், டவுன்ஹால் சாலையில் உள்ளது. இத்தெப்பத்தை சுற்றிலும் 195 கடைகள் உள்ளன. கடைகளில் வாடகைக்கு இருப்போர் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், தெப்பத்திற்குள் மழைநீர் செல்லும் வகையில் தெப்பத்தைச் சீரமைக்கவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வாடகை வசூலிப்பில் திருக்கோயில் நிர்வாகத்தை எதிர்த்து, காய்கறி கடைக்காரர்கள் சிலர் நீதிமன்றம் சென்றனர். வழக்கின் அடிப்படையில், வாடகை முறையாகச் செலுத்தாத 87 கடைகளுக்கு திருக்கோயில் நிர்வாகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
வாடகை செலுத்தாத கடைகளில் 14 கடைகளில் உள்ள பொருள்களை உரியவர்கள் அகற்ற கெடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் டி.அனிதா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மண்டல உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியில் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, திடீர் நகர் காவல் நிலை ஆய்வாளர் துரைப்பாண்டியன் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, "வாடகையை முறையாகச் செலுத்தாதவர்கள் மீது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.