சென்னை: சட்டப் பேரவையில் பெரும்பான்மை கிடைக்க 117 உறுப்பினர்களுக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
அதன்படி, அதிமுகவுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அமைச்சர் டி.ஜெயகுமார் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அதேசமயம், அதிமுகவில் இருந்து அதிருப்தியாக பிரித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு 10 உறுப்பினர்கள் (அவருடன் சேர்த்து) ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள், அதிமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.
அவர்கள் பேரவையில் கொறடா உத்தரவை மீறிச் செயல்படும் பட்சத்தில் அவர்களது சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.
ஆனாலும், இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிருப்தி அணியினரிடம் உரிய விளக்கங்கள் கோரப்பட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நம்பிக்கை வாக்கு கோரும் போது, அதிருப்தி அணியைச் சேர்ந்த 10 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பிரச்னையில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழக சட்டப்பேரவையை நாளை காலை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.