வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கான அணை கட்டும் பணியில் கர்நாடக மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், தமிழக பாசனம் மற்றும் குடிநீர் உரிமைகளுக்கும் எதிரானதாகும்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த சட்டவிரோத செயலை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசிடம் பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
கர்நாடக மாநில தேர்தல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் நலனை மத்திய அரசு பலியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் தொடர் வறட்சிக்கு இலக்காகி பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி, விவசாயிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் அதற்கு உரிய தீர்வு காணமால் மத்திய, மாநில அரசுகள் இருந்து வருகின்றன.
எனவே, வறட்சி உள்ளிட்ட தமிழகப் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
மேலும், விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் ஆகியோரின் கனவுகளின்படி, வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவை சாதனை படைக்க வைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முத்தரசன் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டி, கே.சுப்பராயன் ஆகியோர் பங்கேற்றனர்.