ஒசூர் சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 20 யானைகளை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர், 10 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒசூர் அருகே சானமாவு காட்டுக்கு வந்துள்ள 20 யானைகளை விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், சானமாவு காட்டைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களில் காய்கறி, நெல், ராகி பயிர்கள் வளர்ந்துள்ளதாலும், யானைகள் இந்தப் பகுதியிலேயே முகாமிட்டு தென்பெண்ணை ஆற்றில் குளித்து, விவசாயப் பயிர்களை தின்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
பகலில் சானமாவு காட்டுக்குள் இருக்கும் யானைகள், இரவு நேரத்தில் மட்டுமே விவசாய நிலங்களுக்குள் சென்று பயிர்களைத் தின்று வருகின்றன.
இதனால், இரவு நேரங்களில் யானைகள் கிராமங்களுக்குள் வராமல் இருப்பதற்காக வனத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சானமாவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர்.