கொறடாவால் பிறப்பிக்கப்படும் உத்தரவை மீறும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, தனது உத்தரவை மீறும் உறுப்பினர்கள் குறித்து உடனடியாக பேரவைத் தலைவரின் கவனத்துக்கு கொறடா கொண்டு வருவார்.
உத்தரவை மீறியதால் உறுப்பினர்கள் மீது உடனடியாகவோ அல்லது விளக்கம் கேட்டோ (15 நாள்களுக்குள்) அவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கே இருக்கிறது.
கடந்த 1988-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பேரவை மண்டபத்தில் வைத்தே உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தார் அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன். இதுபோன்ற முன்னுதாரணங்களும் பேரவை அவைக் குறிப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
4-வது நம்பிக்கை வாக்கெடுப்பு...
தமிழகத்தில் சட்டப் பேரவை அமைக்கப்பட்ட (1952) காலத்திலிருந்து இதுவரை நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டுள்ளது.
கடந்த 1952-ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்த போது ஜூன் 30-ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது.
இதன்பின், 20 ஆண்டுகளில் அதுபோன்ற எந்தத் தீர்மானங்களும் பேரவையில் கொண்டு வரப்படவில்லை. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட நேரத்தில், திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, சட்டப் பேரவையில் அவரே தனது அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார். 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றது.
அதிமுகவில் இரு முறை: அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக இரண்டாகப் பிளவுபட்ட நேரத்தில், கடந்த 1988- ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதியன்று ஜானகி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை, மூத்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கொண்டு வந்தார்.
இப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.