சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தில், இன்னும் வாக்கெடுப்பு நடக்காமல் தாமதம் ஆகி வருகிறது.
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.அதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சபை கூடியதும் பன்னீர்செல்வத்தின் அணியினைச் சேர்ந்த கொறடாவான செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே யார் பேசுவது என்பதில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கிடையே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினபேசும் பொழுது ஆளுநர் அவகாசம் அளித்திருக்கும் பொழுது அவசர அவசரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் வேறொரு நாளில் வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று கோரினார்.
ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் வலியுறுத்தினார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யு ம் இந்த கோரிக்கையை எழுப்பியது.
ஆனால் இதை மறுத்த சபாநாயகர் தனபால் ஆளுநர் கொடுத்த அவகாசத்துக்குள்தான் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றும். வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கமுடியாது என்றும் மறுத்து விட்டார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ள எம்.ஏல்.ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பேரவையில் நிலவும் அமளிக்கிடையில் சபாநாயகர் தனபால் உறுதி அளித்தார்.
இதன் காரணமாக அமளி தொடர்ந்து வருவதால் சபை கூடத்துவங்கி ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகியும் நம்பைக்கை வாக்கெடுப்பு நடைபெறாமல் காலம் கடந்து வருகிறது.