சட்டப்பேரவை நிகழ்வுகள் தமிழகத்திற்கு தலைகுனிவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
இதையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் வன்முறை நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதை வன்முறையின் மூலமாக செய்துவிட முடியாது.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர அனைத்துப் பகுதியினரும் ஒத்துழைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
நடைபெறும் நிகழ்வுகள் தமிழகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.