அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பேரவை அமைந்துள்ள தலைமைச் செயலகம் முழுவதும் வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகத்துக்குள் அரசு அதிகாரிகள், பணியாளர்களின் வாகனங்களைத் தவிர்த்து மற்றவர்களின் இரு, நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரவை வளாகத்துக்குள் செல்லிடப்பேசி போன்ற நவீன கருவிகளை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை காமராஜர் சாலைத் தொடங்கி பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை உள்ள பகுதிகளை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். காமராஜர் சாலை,ராஜாஜி சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் போலீஸாரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.