தமிழகத்தைக் காப்பாற்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவைக்குப் பின்னால் அவர்களை இயக்கி வைக்கும் அழிவுச் சக்தியாக சசிகலாவின் குடும்பம்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதிமுகவின் உறுப்பினர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருப்பதால் பழனிசாமியை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனக்குரிய கடமையைச் சரிவர செய்துவிட்டார். இனி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் சமூகக் கடமையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும்.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக, காங்கிரஸ் மற்றும் பன்னீர்செல்வம் அணி என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி பேதங்களைக் கடந்து பழனிசாமி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.