தமிழகத்தில் அதிமுகவின் நிலையற்ற ஆட்சியால், வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை, ஜனப்பன்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நிலையான ஆட்சி கிடைக்கும் என அதிமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், அதிகாரப் போட்டியில், நிலையற்ற ஆட்சிதான் தொடர்கிறது. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பேரவையில், அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பானது, எம்எல்ஏக்கள் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் நடத்துவதற்கு பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 6 மாதமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வழி இல்லாத நிலையில், தற்போது நிலையான ஆட்சியே கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முயன்று வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருங்காலத்தில் மக்கள் இதற்கு பதில் சொல்வார்கள் என்றார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜி.கே.வாசன், தமாகா கொடியேற்றி, தொண்டர்களை சந்தித்தார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.சேகர், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணித் தலைவர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.