தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய அரசை 6 மாதங்கள் கழித்து விமர்சனம் செய்யலாம் என்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாட்டை, 6 மாத காலம் கண்காணித்து விட்டு, அதன் பிறகு அவரது ஆட்சி குறித்து விமர்சனம் செய்யலாம். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு சில எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் ஆதரவு இருந்தாலும், அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உதவும். சசிகலாவை பெங்களூரு சிறையிலிருந்து, தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்ரமணிய சுவாமி கூறியிருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடியே செய்யப்பட்டுள்ளன. அதேபோல சசிகலா மனுவும் தள்ளுபடி செய்யப்படும்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சுகாதார உள்கட்டமைப்பு வசதி குறைவு உள்ளிட்ட பல தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ள நிலையில், ராமர் கோயில் அவசியமற்றது என்றார் கட்ஜூ.