தமிழ்நாட்டில் யார் முதல்வராக இருந்தாலும் அந்த மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது: அதிமுக-வின் உள்கட்சி விஷயத்தில் மத்திய அரசு தலையிடாது. தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு. அங்கு யார் முதல்வராக இருந்தாலும் மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு தொடரும்.
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனை கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் ஒருவரை மற்றொருவர் குற்றம்சாட்டுவதற்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. மாநில அளவில் அமைக்கப்படும் கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலின்போது அமையாமல் போகலாம். எனவே, ஒருவருக்கு எதிராக மற்றொருவர் பேசுவதில் கட்டுப்பாடு வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக முழுப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே யாருடனும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
நாடு இப்போதுள்ள சூழ்நிலையில் பிரதமர் மோடி அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிரதமராக தொடர வேண்டியுள்ளது. பாஜக அரசு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டியுள்ளது. நாட்டில் வறுமை, பசி, பஞ்சம், கல்வியின்மை, சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை எங்குமே இல்லை என்ற நிலையை பாஜக உருவாக்கும். இதற்காக உள்ளாட்சித் தேர்தல் முதல் அனைத்திலும் பாஜக வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அரசின் அனைத்து நிலைகளிலும் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுவது என்பது கவலைக்குரிய விஷயம்தான். இப்போது அது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. சம்பாதித்த பணத்தை திருமணத்துக்காக அதிக அளவில் செலவிடுவதில் என்ன தவறு? என்ற எதிர்வாதமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் திருமணத்தை எளிமையாக நடத்தலாம் என்பது எனது கருத்து என்றார் அவர்.