புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அரங்கேறிய சம்பவங்கள் சட்ட விரோதமானது. இதனால் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பேரவை சனிக்கிழமை தொடங்கியதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினர். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு சபாநாயகரின் மைக்கும் உடைக்கப்பட்டது.
பின்னர் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், பேரவையில் தங்களை குண்டுகட்டாகத் தூக்கி அடித்து உதைத்து சட்டைகளை கிழித்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார்.
திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வெளியேறினார்கள்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் இல்லாமல் பிற்பகல் 3 மணிக்கு மேல் நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது அரங்கேறிய சம்பவங்கள் சட்ட விரோதமானது. இதனால் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.