சென்னை: திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கண்ணியத்தை காக்கவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை மீது நேற்று சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு கோரினர். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு சபாநாயகரின் மைக்கும் உடைக்கப்பட்டது. கட்சியின் இரு உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலின் இருக்கையில் அமர்ந்தனர்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறுகையில், எம்எல்ஏக்களின் இந்த செயல் ஏற்கக்கூடியது அல்ல. அதனை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கண்ணியத்தை காக்கவேண்டும். என்று குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:
நம்பிக்கை தீர்மானத்தை இரண்டு முறை முதல்வர் முன் மொழிந்தார் இது சட்ட மீறலாகும். அதனால் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது முறை அல்ல. எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்புக்கும் கூட மரியாதை தராமல் வாகனத்தை சோதனையிட்டனர். தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் குரல். சட்டப்பேரவையை ஜனநாயகம் இறந்த மன்றமாக்கிவிட்டார் சபாநாயகர். இது குறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுத்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.