திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 7 நீதிமன்ற கட்டடங்கள் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு சனிக்கிழமை அடிக்கல் நாட்டி வைத்தார்.
மகளிர் நீதிமன்றம், குடும்ப நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம், விபத்து, இறப்பு பற்றி விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் விழா திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்து, பேசியதாவது:
ரூ. 23.50 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த கட்டடங்கள் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இங்கு, லிப்ட் வசதி, அஞ்சலகம், வங்கி, நூலகம், உணவகம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். திருவள்ளூரில் பெண் வழக்
குரைஞர்களுக்கு சங்கம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். விழாவில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன், எஸ்.பி. சாம்சன், கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் கார்குழலி, அரசு வழக்குரைஞர் ராம்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.