புதுவையில், பன்றிக் காய்ச்சலால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுவையில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், பன்றிகள் நடமாட்டம் அதிகமுள்ள முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரை 69 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று குணமாகியுள்ளனர். தற்போது, ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, புதுவையில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது.