சட்டப்பேரவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு பேரவைத் தலைவரே பொறுப்பு என்றார் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. எதிர்கட்சிகள் இரண்டு கோரிக்கைகளை பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தின. அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சட்டப்பேரவையில் நடந்தேறின. இதற்கான முழு பொறுப்பும் பேரவைத் தலைவரையே சாரும். பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயலாற்ற வேண்டும். தற்போது அமைந்துள்ள அரசு தமிழ்நாட்டில் நிலவிவரும் கடும் வறட்சி, விவசாயம், வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றார் அவர்.