இலங்கையில் போரின் போதும், அதற்குப் பின்னரும் தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது இப்போது தெரியவந்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போரின்போதும், அதன் பின்னரும் சரணடைந்த தமிழ்ப் பெண்களை, இலங்கை ராணுவத்தினர் பல்வேறு முகாம்களில் அடைத்துவைத்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை இப்போது வெளியாகியுள்ளது.
ஐ.நா. சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களும் சாட்சிகளின் வாக்குமூலங்களோடு இணைத்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடுமை இனப் படுகொலையைவிட மோசமானது. இப்போதாவது சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் இலங்கை போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.