திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், திண்டுக்கல், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றிப் பெற்ற சி.சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வீட்டிற்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பொதுமக்கள் தரப்பில் அச்சுறுத்தல் உள்ளதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, அவர்களது வீடுகளுக்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் விபிபி.பரமசிவம், நிலக்கோட்டைத் தொகுதி உறுப்பினர் தங்கதுரை ஆகியோரின் வீடுகளுக்கும் திங்கள்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருவரின் வீடுகளும் திண்டுக்கல்லில் உள்ளன. தங்கதுரை எம்எல்ஏ திண்டுக்கல் திரும்பி வந்துவிட்ட நிலையில், பரமசிவம் திங்கள்கிழமை வரை சென்னையிலிருந்து திரும்பவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
வத்தலகுண்டு: சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பிறகு முதன்முறையாக நிலக்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு திங்கள்கிழமை எம்எல்ஏ ஆர்.தங்கத்துரை வந்தார். அப்போது அவருக்கு நிலக்கோட்டை போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். ஒரு சார்பு-ஆய்வாளர் தலைமையில் 4 போலீஸார் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, எம்எல்ஏ ஆர்.தங்கத்துரை கூறும்போது, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், தொகுதி நிலவரங்களை சுதந்திரமாகப் பார்வையிடவும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றார்.
இதற்கு முன் இவ்வாறு இல்லையே என்றதற்கு, இதற்கு முன் பாதுகாப்பு தேவைப்படவில்லை தற்போது தேவைப்படுகிறது என்றார். அப்போது அதிமுக ஒன்றிய செயலர் யாகப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.