சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின்படி தலா ரூ.10 கோடி அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என பெங்களூரு மத்திய சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை சாதாரணக் கைதி போலவே நடத்தி வருகிறோம். அவரது அறைக்கு அருகே பாதுகாப்புக் காரணங்களுக்காக கூடுதலாக மகளிர் சிறைக் காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் அவருக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவின் பேரில், சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான தலா ரூ.10 கோடியை செலுத்தத் தவறினால், 13 மாதங்கள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.