நடிகை அமலாபால்- இயக்குநர் விஜய் ஆகியோருக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த அமலாபால் (25), 2010-இல் தமிழ் திரைப்படத் துறையில் "வீரசேகரன்' எனும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் "சிந்துசமவெளி', "மைனா', "தெய்வத் திருமகள்', "தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோல், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான "கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய். பின்னர், "மதராசபட்டினம்', "தலைவா', "சைவம்' உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார்.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த "தலைவா' படத்தை இயக்குநர் விஜய் இயக்கினார். அப்போது, இயக்குநர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரு வீட்டார் ஒப்புதலுடன், கேரள மாநிலம் கொச்சியில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 7-இல் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின்னர் சென்னை அடையாறு போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக் குடித்தனம் நடத்தினர். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் சுமூகமாக பிரிவது என்று முடிவு செய்து சென்னை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு 2-ஆவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி முன்பு நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இருவரும் நேரில் ஆஜராகி, மனமொத்து பிரிவதாகக் கூறி பிரமாண பத்திரங்களை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி செவ்வாய்க்கிழமை தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.