நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் பற்றிய அவைக் குறிப்புகளில் திருத்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவையில் பிப். 18-இல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பொது நல மனுத்தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திமுக தரப்பு மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை முறையீடு செய்தார். அப்போது செவ்வாய்க்கிழமை இந்த மனு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியபோது வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், "திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இந்த வழக்கை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் பற்றிய அவைக் குறிப்புகள், இதுவரை திமுக உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆகவே, தங்களுக்குச் சாதகமான முறையில் திருத்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், புதன்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமையன்று மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்க்கு உயர்நீதிமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தத் திட்டமிட்டதால், பிற்பகலில் எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.