தருமபுரி: தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலைதான் என்று சிபிசிஐடி அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டபோது, நீதிமன்றத்தில், அவரது தந்தை இளங்கோ இல்லை.
அவர் பணியாற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும் நேற்று வரவில்லை. அவரது குடும்ப உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்த இளங்கோ மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தெரிய வந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கேட்ட போது, மகனின் மரணம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது என்றே எங்களுக்குத் தெரியாது. பிப்ரவரி 17ம் தேதி விசாரணைக்கு வரலாம் என்று வழக்குரைஞர் கூறியிருந்தார். மேலும் மரணம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க சிபிசிஐடி மேலும் கால அவகாசம் கோரும் என்றுதான் கூறியிருந்தார்.
ஆனால், மாவட்ட காவல்துறை அளித்த அதே அறிக்கையை தாக்கல் செய்ய, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு ஏன் மாற்றப்பட வேண்டும். காவல்துறையின் பார்வையில் இருந்து வேறுபட்டு, புதிய தடயங்களை சேகரிப்பதுதானே சிபிசிஐடியின் வேலை. ஆனால், இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
என்றாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் நீதிக்காக போராடப் போவதாகவும் இளங்கோ கூறினார்.
தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நாங்கள் போராடும் போராட்டத்தில் எங்கள் கிராமத்தினர் எங்களுக்கு உதவவில்லை. எங்கள் மகனின் திருமணத்தால் தான் அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது கோபத்தில் உள்ளனர் என்று இளவரசனின் தாயார் கிருஷ்ணவேணி கூறுகிறார்.