திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 12ஆவது கரிசல் திரைவிழா புதன்கிழமை (பிப். 22) தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. 24ஆம் தேதி நடிகர் சிவகுமார் மாணவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக தொடர்பியல் துறைத் தலைவர் பி. கோவிந்தராஜு செவ்வாய்க்கிழமை கூறியது: சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை மாணவர் அமைப்பான மனோ மீடியா கிளப் சார்பில் ஆண்டுதோறும் கரிசல் திரைவிழா நடைபெற்று வருகிறது. 12ஆவது கரிசல் திரை விழா புதன்கிழமை தொடங்கி 3 தினங்கள் நடைபெற உள்ளது.
இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியாவிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட ஊடகத் துறை மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கி. பாஸ்கர் தலைமை வகிக்கிறார். பதிவாளர் அ. ஜான் டி பிரிட்டோ தொடங்கிவைக்கிறார். சிறப்பு விருந்தினராக "எத்தன்' திரைப்பட இயக்குநர் எல். சுரேஷ் பங்கேற்கிறார். விழா குறித்து மனோ மீடியா கிளப் தலைவர் மாரீஸ்வரி அறிமுக உரை ஆற்றுகிறார்.
மாணவர் சந்திப்பு: 2ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் "சும்மா அண்ணாச்சிக்கு-யூ டியூப்' இணையதள குழுவினர்-மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சியில் ஊடகத் துறை மாணவர்கள்- கார்டூனிஸ்ட் காசிப்கான், ஊடகவியலாளர் செந்தில் ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு மாணவர்கள்-நடிகர் சிவகுமார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது ஊடகத் துறை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, ஊடகத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.